“தமிழர்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்...” - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர்

“தமிழர்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்...” - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

அந்த வகையில் இன்று நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த செயற்குழு கூட்டத்தில் இறுதியாக 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் குறிப்பாக தமிழகத்தில் உடனடியாக சாதி வாரிய கணக்கெடுப்பை நடத்தி கல்வி, வேலைவாய்ப்பில் அதற்கு ஏற்ப இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோட்டையை நோக்கி மாபெரும் கோரிக்கை பேரணி நடத்தி முதல்வரை வலியுறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமாக செயல்படும் ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானம் இயற்றப்பட்டது மற்றும் தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்களின் குடியேற்றத்தை கட்டுப்படுத்த வட கிழக்கு மாநிலங்களில் உள்ளதை போல உள்நுழைய அனுமதிச்சீட்டு முறையை கட்டாயப்படுத்த வேண்டும் என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. திமுக அரசு வழங்கிய தேர்தல் அறிக்கையின் படி தமிழ்நாட்டில் உள்ள தமிழக அரசு பணிகளில் 100% மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவன பணிகளில் 90% மண்ணின் மக்களுக்கே வழங்க வேண்டும் இதற்காக மற்ற மாநிலங்களில் உள்ளது போல தனி சட்டம் இயற்ற வேண்டும், வடமாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்குரிமை வழங்குவதை கைவிட வேண்டும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் கொஞ்சம் கொஞ்சமாக மூட வேண்டும் என்பன போன்ற 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ஆன்லைன் ரம்மிக்கு தடை கொடுக்காமல் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்ற கூறியவர், நடிகர்கள் ரஜினி,கமல்,விஜய், அஜித் அனைவரும் தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்தி தமிழக தொழிலாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார். மேலும் பேசிய அவர், உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற ஆளுநர் மாளிகையில் அமைச்சர் என்ற மரியாதை நிமித்தமாக, மேடை நாகரிகம் கருதி உதயநிதி ஸ்டாலினை தான் அண்ணன் என்று அழைத்ததாகவும் தமிழக அரசு உடனடியாக சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி ஒரு லட்சம் பேரைத் திரட்டி கோட்டை நோக்கி பேரணி நடத்த உள்ளோம் எனவும் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், நடிகர் சரத்குமாருக்கு வேண்டுமானால் ஆன்லைன் ரம்மி மைண்டு கேமாக இருக்கலாம், ஆனால் அது ஒரு சூதாட்டம். அதனை தடை செய்ய வேண்டும் எனவும், சரத்குமார் சொன்னதை என்னால் ஏற்று கொள்ள முடியாது. அதற்கு மீண்டும் சட்டம் ஒப்புதல் அளிக்க வேண்டும், ஆளுநர் ஒப்புதல் அளிக்கா விட்டால் அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றார். பால், நெய் விலைபோன்று மின் கட்டண உயர்வையும் திரும்பப்பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் எனவும் எல்.எல்.சி தொழிற்சாலைகளுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு என்.எல்.சியில் 90 சதவீதம்  வேலைவாய்ப்பை உறுதிபடுத்த போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க : மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய சமூகத்தை ஏற்படுத்த மாரத்தான் போட்டி...! டிஜிபி பங்கேற்பு...!