திமுகவில் இணைந்த மாகேந்திரனுக்கு முக்கிய பதவி வழங்கிய மு.க.ஸ்டாலின்...

மக்கள் நீதி மையம் கட்சியின் துணைத் தலைவராக இருந்து சமீபத்தில் திமுகவில் இணைந்த மாகேந்திரனுக்கு தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக நியமித்து அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

திமுகவில் இணைந்த மாகேந்திரனுக்கு முக்கிய பதவி வழங்கிய மு.க.ஸ்டாலின்...
மக்கள் நீதி மையம் கட்சியின் துணைத் தலைவராக செயல்பட்டவர் கோவையைச் சேர்ந்த மகேந்திரன். 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட்டு 1.50 லட்சம் வாக்குகள் பெற்றார். பின்னர், 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மையத்தின் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.பின்னர் கமல்ஹாசனிடம் ஜனநாயகத் தன்மை இல்லை என்று கூறி கட்சியிலிருந்து வெளியேறிய மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 
 
இந்த நிலையில் மகேந்திரன் முன்பே திமுகவில் இணைந்திருந்தால் கொங்கு பகுதியில் திமுக வெற்றி பெற்றிருக்கும்' என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மனம் திறந்து பாராட்டினார். அப்போதே, மகேந்திரனுக்கு முக்கிய பதவி வழங்கப்படலாம் என பேச்சு எழுந்தது. மகேந்திரனுக்கு திமுகவின் ஐடி விங்-இல் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் பரவியது. இந்நிலையில், தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக ஆர்.மகேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.