லூப் சாலை வழக்கு...! இடையூறு இல்லாமல் மீன்கடைகளை அமைக்க அனுமதி...! உயர் நீதிமன்றம்...!!
மெரினா லூப் சாலையில் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையின் ஓரமாக ஆக்கிரமித்து, அப்பகுதி மீனவர்கள் மீன் கடைகள் அமைத்துள்ளதாகவும், அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், லூப் சாலையின் மேற்கு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யவும், அங்குள்ள உணவகங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதா என விசாரணை நடத்தி ஏப்ரல் 18 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதாகவும், அப்பகுதியில் உள்ள மீனவர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் 75 மீன் கடைகள், 15 குடிசைகள், 21 பெட்டிக்கடைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் நேற்று உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
புதியதாக மீன் சந்தை அமைக்கும் வரை மீனவர்கள் குடியிருப்பில் இருந்து சாலைக்கு இடையில் உள்ள இடத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும், போக்குவரத்தை முறைப்படுத்துவதாகவும் நீதிமன்றத்தில் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுசம்பந்தமாக மனுவாக தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பாலாஜி அமர்வு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சாலையின் மேற்கு பகுதியில் உள்ள நடைபாதையில் தற்காலிகமாக மீன்கடைகள் அமைக்கப்படுவதாகவும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஒழுங்குபடுத்தப்படும் எனவும், கலங்கரை விளக்கத்தின் பின்புறமும், சீனிவாசபுரத்தின் அருகிலும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்த இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி மாநகராட்சி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மேலும், யாருக்கும் தரம்சங்கடம் ஏற்படுத்த விரும்பவில்லை எனவும், பொதுசாலை மாநகராட்சி சொத்தல்ல எனவும் அது மக்கள் சொத்து எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், சாலையை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது எனவும் இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது எனவும் தெரிவித்தனர்.
முன்னதாக நீதிபதிகளின் உத்தரவை எதிர்த்து லூப் சாலையில் மீனவர்கள் 3 நாட்களாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே மீனவர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆணையர் ககன்தீப் சிங் பேடியுடன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில் மீனவர்கள் தரப்பு வாதங்களை கேட்டறிந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அதனை நீதிமன்றத்தில் எடுத்துரைக்க ஆவன செய்வதாக வாக்குறுதி அளித்தனர் என்பது குறிப்பிட தக்கது.
இதையும் படிக்க:"சுத்தம் என்கிற பெயரால் மீனவர்களின் வாழ்வை சிதைப்பது நீதிக்கு புறம்பானது" திருமாவளவன்