கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு...!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிஐடிக்கு மாற்றம்:
நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வேகமெடுத்துள்ளது. மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி அதிமுக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என கிட்டத்தட்ட 230-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.
மேலும் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய உயிரிழந்த கார் ஓட்டுநர் கனகராஜின் உறவினர்கள், குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், சயன் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தினர்.
இதையும் படிக்க: மீண்டும் ஓங்கிய ஓபிஎஸ் கை..! அதிமுக தேர்தலுக்கு செக் வைத்த உச்ச நீதிமன்றம்..!
இந்நிலையில் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மனோஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனவும், வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிட வேண்டும் எனவும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நிலுவையில் இருந்து வரும் நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.