திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் கடத்தல்...! எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்..!
தூத்துக்குடியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் கடத்தப்பட்டதாக கூறி எஸ்பி அலுவலகத்தில் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
தூத்துக்குடி அருகே உள்ள மேலத்தட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். கடந்த வாரம் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று அவர் மாயமானார். அவர் ஒரு இளைஞரை காதலித்து வந்ததாகவும், அவருடன் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண்ணின் தந்தை, தனது மகளை தூத்துக்குடியை சேர்ந்த சோலையப்பன் என்பவர் கடத்திச் சென்று விட்டதாக தட்டப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார் குறித்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வின்சென்ட் அன்பரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் பெண்ணின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தை இன்று காலை முற்றுகையிட்டனர். பெண்ணை கடத்திய இளைஞரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் இது தொடர்பாக பெண்ணின் தந்தை எஸ்பியிடம் புகார் மனு அளித்தார். இந்த சம்பவம் எஸ்பி அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.