தகுதியற்றவர்களுக்கு கலைமாமணி விருதா ? எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்!

தகுதியற்றவர்களுக்கு கலைமாமணி விருதா ? எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்!

இயல், இசை, நாடக மன்றத்தை கலைக்க உத்தரவிட நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பொதுநல மனு:

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சமுத்திரம் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ”தமிழ்நாடு இயல், இசை, நாடகம் மன்றம் சார்பாக கலை மற்றும் பண்பாடு துறை மூலமாக இளைஞர்களுக்கு இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற கலைகள், ஓவியம் மற்றும் சிற்பக்கலை ஆகியவை கற்பிக்கப்படுகிறது. அதேபோல், அந்த மன்றம் சார்பாக ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி வருகிறது.

5 பிரிவின் கீழ் கலைமாமணி விருது:

தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருது 5 பிரிவின் கீழ் தகுதி உள்ளவர்களுக்கும், சாதனை படைத்தவர்களுக்கும் வழங்கப்படுகிறது. அதன்படி, 18 வயது கீழ் உள்ளவர்களுக்கு "கலை இளமணி" விருதும், 19 முதல் 35 வயது வரை "கலை வளர்மதி" விருதும், 36 முதல் 50 வயது வரை "கலை சுடர்மணி" விருதும், 51 முதல் 60 வயது வரை "கலை நன்மணி" விருதும், 61 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு "கலை முதுமணி" விருதும் வழங்கப்படுகிறது.

விருதுகளை திரும்ப பெற உத்தரவிட வேண்டும்:

ஆனால், கலைமாமணி விருது வழங்குவதற்கு இதுவரை வயதுவரம்போ, எந்தவித தகுதியோ, எந்தவித நெறிமுறையோ இன்று வரை வகுக்கப்படவில்லை. அதற்கு சான்றாக, 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது 20.02.2021 ஆம் தேதியன்று நடத்தப்பட்டது.  அதில் தகுதி இல்லாத நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டதோடு மட்டுமில்லாமல், நபர்களுக்கு வழங்கிய சான்றிதழில் உறுப்பினர், செயலாளர் மற்றும் தலைவர் ஆகியோரின் கையொப்பம் இன்றி அவசரக் கதியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தகுதி இல்லாத நபர்களுக்கு 2021ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்ப பெற வலியுறுத்தி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அந்த விருதுகளை திரும்ப பெற உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

குற்றம் சாட்டிய மனுதரப்பு வழக்கறிஞர்:

தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்ப பெற உத்தரவிட கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி மகாதேவன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2021 ஆம் ஆண்டு கலைமாமணி விருது முந்தைய அரசால் வழங்கப்பட்டது என தெரிவித்தார். தொடர்ந்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலமுருகன் பாண்டி, 2021ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டினார்.

கேள்வி எழுப்பிய நீதிபதி:

அப்போது குறுக்கிட்ட நீதிபதி மகாதேவன்,

* கலைமாமணி விருது எதன் அடிப்படையில் வழங்குகிறீர்கள்? எவ்வாறு நபர்களை தேர்வு செய்கிறீர்கள்? 

* விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது.

* கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.

* கலைத்துறையில் சாதனைகள் செய்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கலைமாமணி விருது விருது, தற்போது 2 படங்களில் நடித்து விட்டால் அவர்களுக்கு விருது வழங்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளதாக அதிருப்தி தெரிவித்தனர். 

தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கலைமாமணி விருது குறித்தும், தற்போது வழங்கப்பட உள்ள கலைமாமணி விருதுகள் குறித்தும் தமிழ்நாடு சுற்றுலா மற்றும் கலைத்துறை செயலாளர், தமிழ்நாடு இயல்-இசை-நாடக மன்ற தலைவர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர், செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நவம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.