"ஜெயலலிதா மரணம்" அப்பல்லோ மருத்துவர்களிடம் 3 நாட்கள் குறுக்கு விசாரணை.. வெளியான முக்கிய தகவல்!!

2016ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி வரை, ஜெயலலிதா நலமுடன் தான் இருந்தார் என ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான அப்பல்லோ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

"ஜெயலலிதா மரணம்" அப்பல்லோ மருத்துவர்களிடம் 3 நாட்கள் குறுக்கு விசாரணை.. வெளியான முக்கிய தகவல்!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதுவரை 156 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆணையம் தரப்பு மற்றும் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு விசாரணையை நிறைவு செய்தனர்.

இந்நிலையில், மறு விசாரணைக்காக அப்பல்லோ மருத்துவமனையின் 9 மருத்துவர்களுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன்படி, நேற்று இரண்டு மருத்துவர்கள் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

தொடர்ந்து இன்று மறு விசாரணைக்காக மருத்துவர்கள் நரசிம்மன் மற்றும் பால் ரமேஷ் ஆகியோர் ஆஜராகினர்.

அப்போது, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு செப்டம்பர் 29, 30 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் எக்மோ கருவி பொருத்தப்படுவது தேவையா என ஆலோசிக்கப்பட்டதாகவும், ஆனால் தேவையில்லை என முடிவு எடுக்கப்பட்டதாகவும் மருத்துவர் பால் ரமேஷ் வாக்குமூலம் அளித்தார்.

அதனை தொடர்ந்து வாக்குமூலம் அளித்த மருத்துவர் நரசிம்மன், 2016ஆம் ஆண்டு  டிசம்பர் ஒன்றாம் தேதி, அதாவது ஜெயலலிதா இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பு, ஜெயலலிதாவை சந்தித்தாகவும், அவர் நலமுடனே இருந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.