ED அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதிப்பு - உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, சோதனைகள் நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தது. அத்துடன் திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான விவரங்களுடன் ஆஜராகும்படி, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்(நீதிமன்றத்தில் ஆஜராகும் படி) அனுப்பியது.

இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மணல் கொள்ளை பற்றி விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரமில்லை எனவும், மாநில அரசு விவகாரங்களில் அமலாக்கத்துறை தலையிடும் சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சாா்பில் வாதிடப்பட்டது. 

இதையும் படிக்க : செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் Google யை மேற்கோள் காட்டி நீதிபதி கூறிய தீர்ப்பு...!

அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. கனிம வள சட்டம் மட்டுமல்லாமல், இந்திய  ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் அளவுக்கு அதிகமாக மணல் எடுத்ததன் மூலம், 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் பணம் பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க அரசு முயற்சிக்கிறது எனவும் அமலாக்கத்துறை சாா்பில் குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனு மீதான தீர்ப்பை இன்று ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், சம்மனை எதிர்த்து தமிழ்நாடு அரசும், மாவட்ட ஆட்சியர்களும் தாக்கல் செய்த மனுக்களை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேசமயம், அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்த ஆட்சேப (உடன்பாடு இல்லை) மனுவுக்கு பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு 3 வார கால அவகாசம் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.