ராஜேந்திர சோழனின் 6 ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு...! கண்டுபிடித்த வரலாற்று ஆய்வுக் குழு..!

ராஜேந்திர சோழனின் 6 ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு...! கண்டுபிடித்த வரலாற்று ஆய்வுக் குழு..!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா மதகொண்டப்பள்ளியில், பாப்பண்ணா என்பவருக்கு சொந்தமான இடத்தில், மண்ணில் புதைந்திருந்த நான்கடி உயரமும், ஒரு அடி விட்டமும் கொண்ட நான்கு கல் தூண்கள், முன்னாள் தலைவர் ராஜா மற்றும் கிராமத்தினர் உதவியுடன் தோண்டி எடுக்கப்பட்டது. அந்த நான்கு தூண்களில் இரண்டு, ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழனுடைய கல்வெட்டாகும். தற்போது அங்கிருக்கும் சிவன் கோவிலில் இந்த தூண்கள் இருந்தன. பின்பு வந்த ஒய்சாள மன்னர்களின் காலத்தில் 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பழைய கோயிலை புத்துப்பித்துள்ளனர். 

பின்னர் அந்த பழைய கோயிலில் இருந்த அந்த தூண்கள் வெளியே எடுத்துவரப்பட்டு, அதன் மீது, கல்லால் ஆன தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டு 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை பயன்பாட்டில் இருந்துள்ளது. தொடர்ந்து இந்த பகுதியில் உள்ள வீடுகள் கட்ட தொடங்கிய பின் இந்த தொட்டியில் உள்ள மேல் பலகைகள் இந்த தூண்களை மூடி மண்ணில் புதைந்து போனது. இந்த கல்வெட்டு குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ்,  முதலாம் ராஜேந்திரனின் மெய்கீர்த்தியோடு தொடங்கும் இக்கல்வெட்டு, முரைசூர் நாட்டு தென்கரை குணநல்லூர் மஹாதேவருக்கு திருவமுதுக்காக பராந்தகன் இரணமுகநான செம்பியன் மிலாடுடையான் என்பவன் இவ்வூராரிடம் பொன் கொடுத்து நிலம் வாங்கி தானமளித்த செய்தியை தெரிவிக்கிறது. 

தானத்தின் எல்லைகளை குறிப்பிடும் போது ஒத்தைக்கல் மலையம்மன் என்ற ஒரு அம்மனின் பெயரைக் குறிப்பிடுகிறது. அந்த அம்மன் இன்றும் மாரியம்மன் என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளதும் கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஓசூருக்கு முரைசூர் நாடு என்ற பெயர் இக்கல்வெட்டில்தான் முதன்முதலாக வருகிறது. இதுவரை 13ம் நூற்றாண்டில் தான் முரசுநாடு என்ற பெயர் வந்ததாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஓசூர், முரசுநாடு என்று அழைக்கப்பட்டதை இக்கல்வெட்டு வெளிப்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல், சோழர் காலத்தில் மதகொண்டபள்ளியின் பெயர் குணநல்லூர் என்று இருந்துள்ளது. பின்னர் ஒய்சாளர்கள் இந்த பகுதியை ஆண்டபோது இப்பகுதியை ஆட்சி செய்து வந்த பூர்வாதராயர்கள் இந்த கோயிலை புணரமைத்துள்ளனர். அதன் பின்பு இந்தக் கோயிலின் பெயர் திரு அங்கநாதர் என்றும், அங்கீஸ்வர நாயனார் என்றும் அழைக்கப்பட்டு தற்போது அர்க்கீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. அம்மனின் பெயர் ஸ்ரீவந பெருந்தேவி நாச்சியார் என்பதாகும். அதற்கான கல்வெட்டுகளும் கோயிலில் காணப்படுகின்றன.

அதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சோழர் காலத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் மிக பழமையான கல்வெட்டு என்பது இதுவாகும். இதுவரை ராஜேந்திரனின் 24 மற்றும் 26ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் முறையே கங்காவரம் மற்றும் அனுசோனை ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. அவை நடுகல் கல்வெட்டுகளாகும். தற்போது கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டுகள் 6 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டாகும். மேலும் இது கோயிலுக்கு வழங்கப்பட்ட தானத்தைக் குறிக்கும் கல்வெட்டாகும். இக்கல்வெட்டு வாயிலாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மிகப்பழமையான கோயில் மதகொண்டப்பள்ளி அர்க்கீஸ்வரர் கோயில் என்பதும், ஓசூர் 1020ம் ஆண்டிலேயே முரசுநாடு என்றழைக்கப்பட்டதும் தெரியவருகிறது. எனவே இக்கல்வெட்டு வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டாகும் என கூறினார். மேலும், இந்த ஆய்வின் போது, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், வரலாற்று ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார், சரவணகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிக்க :  இந்திய எல்லையில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்..!!