தமிழகத்தில் பள்ளிக்கூடம் திறக்க போறாங்க! விரைவில் அறிவிப்பு?

பள்ளிகள் திறக்க செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள், மாணவர்கள் சேர்க்கை உயர்த்துதல் உள்ளிட்டவை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா நாளை மறுநாள் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் பள்ளிக்கூடம் திறக்க போறாங்க! விரைவில் அறிவிப்பு?

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில்,அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலம் நடைப்பெறும் ஆலோசனையில் ஆணையர் நந்தகுமார், இயக்குநர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டது. சுமார் 9 மாதங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு, ஜனவரி மாதம் முதல் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக,  கொரோனா 2ம் அலை தொடங்கியதால்,மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டதோடு,பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. 

இந்த நிலையில்,  தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டதால் தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது.பல்வேறு மாநிலங்களில் தொற்று குறைந்துள்ளதால் அங்கு பள்ளிகள் திறக்க அந்தந்த மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. அதேப்போல் தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது குறித்தும், செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்துவது, தனியார் பள்ளிக்கு இணையாக தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது, இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, விலையில்லா பாடப்புத்தகங்கள், மடிக்கணினி வழங்கப்பட்ட விவரம், சிறப்பு எழுத்தறிவுத் திட்டம், அங்கீகாரம் வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாகவும் இந்த  ஆலோசனை கூட்டத்தில் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில், பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் முதலமைச்சருடன் மீண்டும் ஆலோசனை மேற்கொண்ட பின் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.