சட்ட விரோதமாக மணல் கொள்ளை... தமிழக அரசு விளக்கம்!!

சட்ட விரோதமாக மணல் கொள்ளை... தமிழக அரசு விளக்கம்!!

மணல் குவாரிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்கும் வகையில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பொதுநல வழக்கு:

வேலூரில் உள்ள பெருமுகை ஊராட்சி அரும்பருத்தி பகுதியில் பாலாற்றில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதாக கூறி வேலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் கஜராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

மனுவில்...:

அந்த மனுவில்,பொக்லைன் இயந்திரங்கள் மூலம் 1மீட்டர் ஆழத்தை விட அதிகமாக மணல் எடுப்பதால்  நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.  விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க குழு ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொள்ள  வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளார்.

விசாரணை:

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் மணல் குவாரிகளில் மணல் அள்ள பல்வேறு நிபந்தனைகள் விதித்து அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளதாகவும்,இந்த அரசாணை கண்டிப்புடன் பின்பற்றப்பட்டு வருவதாகவும்,குவாரிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க தொடர்ந்து  கண்காணிக்க பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

உத்தரவு:

இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கையும்,மணல் அள்ள நிபந்தனைகள் விதித்த அரசாணையையும்  தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமை தள்ளிவைத்தார்.

இதையும் படிக்க:  ஆன்லைன் ரம்மி... கடுமையான நடவடிக்கை எடுக்க கூடாது...!!!