நம் மாநிலத்திலிருந்து ஓருவர் ஒன்றிய அமைச்சர் என்றால் அது மகிழ்ச்சி தானே.? -அமைச்சர் துரைமுருகன் பேச்சு.! 

நம் மாநிலத்திலிருந்து ஓருவர் ஒன்றிய அமைச்சர் என்றால் அது மகிழ்ச்சி தானே.? -அமைச்சர் துரைமுருகன் பேச்சு.! 

நம் மாநிலத்தில் இருந்து யாரோ ஒருவர்  ஒன்றிய அமைச்சராக வந்தால் மகிழ்ச்சிக்குரியது தானே என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். 

டெல்லியில் ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சரை சந்தித்த தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மேகதாது அணை, காவிரி நதி நீர் பிரச்சினை உள்பட பல பிரச்சனைகள் குறித்து பேசினார் என்று கூறப்பட்ட நிலையில், டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு அமைச்சர் துரைமுருகன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், "மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என கர்நாடக அரசு முயற்சிக்கிறது. இது சட்டவிரோதமானது. உச்சநீதிமன்ற ஆணைக்கு புறம்பானது. மாநிலத்தில் ஒடும் நதி தனக்கே என்று சொல்ல கூடாது என்ற விதி இருக்கிறது. எல்லாவற்றையும் மீறி அணை கட்டுவோம் என சொல்கிறார்கள். அணை கட்டுவது தொடர்பாக அறிக்கை தயாரிக்க ஒன்றிய நீர்வள கமிஷன் அனுமதி அளித்தது  நியாயம் தானா? என ஒன்றிய அமைச்சரிடம்  கேட்டேன்.  

அறிக்கை தயார்  செய்ய அனுமதி தந்தாலே அணை கட்ட முடியாது. அதன் பிறகு பல அனுமதிகள் பெற வேண்டி உள்ளது. அறிக்கை தயாரிக்க அனுமதி தந்தால் அணை கட்டிவிடுவார்கள் என்று நினைக்க கூடாது.  ஒன்றிய அரசு பார்த்து கொண்டு இருக்காது என ஒன்றிய  அமைச்சர் தைரியமாக சொன்னார். 

மார்க்கண்டேய அணை கட்டுவது குறித்து உச்ச நீதிமன்றம் சென்ற போது நடுவர் மன்றம் அமைத்து கொள்ளுங்கள் என தெரிவித்தது. உடனே ஒன்றிய அரசு ஒரு குழு அமைத்தது. அந்த குழுவும் நடுவர் மன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறிவிட்டது. 2 ஆண்டுகளாக நடுவர் மன்றம் அமைப்பதில் ஒன்றிய அரசுக்கு என்ன தயக்கம் என்று கேட்டேன். உடனே நீர்வள துறை அதிகாரிகளிடம் நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என்று கூறினார். 


பிரதமரை நேரில் சந்தித்து தமிழக முதலமைச்சர் பேசினார். கர்நாடக முதலமைச்சர் எழுதிய கடிதத்திற்கு தமிழக முதலமைச்சர் விரிவான கடிதம் எழுதினார். அதற்கும் கர்நாடக முதல்வர் கருத்து தெரிவித்திருப்பது வியப்பாக இருக்கிறது. நீண்ட காலம் அரசியலில் இருப்பவர். எங்கள் மதிப்புக்குரியவர் தான் எடியூரப்பா. ஆனால் கருத்தை தெரிவித்து இருப்பது வருத்தமளிக்கிறது.

கிருஷ்ணா நிதி நீர் விவகாரத்தில் பிரச்சனை இல்லை. தண்ணீர் கேட்டால் ஆந்திரா திறந்து விடுவார்கள். காவிரியில் இருந்து ஜுலை மாதம் 30 டி.எம்.சியுமும் ஜுன் மாதம் 19 டி.எம்.சி. யும் வந்து இருக்க வேண்டும். ஆனால் 2 மாதத்தில் தமிழகத்திற்கு 5.67 டி.எம்.சி. தான் கிடைத்து உள்ளது. இது பற்றி யாரிடமும் முறையீடுவது. ஒன்றிய அமைச்சரிடம் சொல்லலாம். அல்லது காவேரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திடம் முறையீட வேண்டும். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு 3 மாதமாகியும் ஆணையத்திற்கு ஒரு தலைவர் போடப்பட வில்லை. ஆணையத்திற்கு தலைவர் நியமிப்பதில் என்ன தடை என ஒன்றிய அமைச்சரிடம் கேட்டேன். நியாயத்தை உணர்ந்து உடனடியாக ஆணைய தலைவரை நியமிக்க உத்தரவிட்டு உள்ளார். 

நம் மாநிலத்தில் இருந்து யாரோ ஒருவர்  ஒன்றிய அமைச்சராக வந்தால் மகிழ்ச்சிக்குரியது தானே. திட்ட தயாரிக்க அனுமதி தந்துவிட்டாலும் அணை கட்ட முடியாது. கீழ் பகுதியில் உள்ள தமிழக ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது. 

ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் பிரச்சனைகளை புரிந்து வைத்து விரிவாக பேசினார். அவருடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமானது. முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் பயணத்தை மேற்கொண்டேன். முல்லை-பெரியாறு அணையில் உச்சநீதிமன்றம் பேபி அணை கட்டினால் 152 அடி வரை தண்ணீரை நிறுத்தலாம் என்றது. பேபி அணை கட்ட சென்றால் 15 மரங்கள் இருக்கிறது. அந்த மரங்களை அகற்ற கேரள அரசு அனுமதிக்கவில்லை. சாலையை போடவும் விடவில்லை. இது பற்றி கேட்டோம். இது பற்றி கேரளா அரசுடன் பேசுவதாக தெரிவித்தார். 

கோதாவரி-குண்டாறு அணை இணைப்புக்கு திட்ட அறிக்கை தயாரித்து கையில் வைத்து உள்ளீர்கள். கோதாவரியில் இருந்து கிருஷ்ணா, கிருஷ்ணாவில் இருந்து பென்னாறு, பென்னாறில் இருந்து பாலாறு, பாலாற்றில் இருந்து காவிரி, காவிரியில் இருந்து குண்டாறு என பல கட்டங்கள் உள்ளது. இதில் காவிரியில் இருந்து குண்டாறு வரை பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது. அதற்கான நிதியை தர வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தேன்" எனக் கூறினார்.