ராக்கெட் ஏவுதளத்திற்கு செல்லும் மதுரை மாணவிகள்..அழைப்பு விடுத்த இஸ்ரோ!

ராக்கெட் ஏவுதளத்திற்கு செல்லும் மதுரை மாணவிகள்..அழைப்பு விடுத்த இஸ்ரோ!

செயற்கைக்கோள் மென்பொருள் தயாரித்து சாதனை படைத்த  அரசுப்பள்ளி மாணவிகளுக்கு  இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது.

மாணவிகளை தேர்வு செய்த இஸ்ரோ:

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள 75 பள்ளிகள் இஸ்ரோ சார்பில் தேர்வு செய்யப்பட்டன. அதிலும் குறிப்பாக, மாணவிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். வான்வெளி அறிவியலில் பெண்களின் பங்கேற்பை கவுரவிக்கும் வகையில் முற்றிலும் மாணவிகளை மட்டுமே கொண்டு செயற்கைக்கோள் மென்பொருட்கள் தயாரிப்பதற்காகவே தேர்வு செய்யப்பட்டனர். ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா சார்பில் 75 பள்ளிகளை சேர்ந்த 750 மாணவிகள் தேர்வாகியுள்ளனர். 

மதுரை மாணவிகள் தேர்வு:

இந்த புதுமை முயற்சியில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் பவதாரணி, ஏஞ்சல், கௌரி, ஹரி வைஷ்ணவி, உள்ளிட்ட 10 மாணவிகள் தேர்வாகியுள்ளனர். தேர்வான மாணவிகளுக்கு,  இஸ்ரோ சார்பில் செயற்கைக் கோளின் ஒரு பாகம் தயாரிப்பதற்கான 'சிப்' அனுப்பிவைக்கப்பட்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கினர்.

சிறப்பாக செய்து முடித்த மதுரை மாணவிகள்:

மாணவிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ’சிப்' வான் வெளியில் உயரம், தட்ப வெப்பநிலை, ஈரப்பதத்தில் எவ்வாறு இந்த பாகம் செயல்படும் என்பது தொடர்பான புரோகிராம் ஆகும். இந்த புரோகிராமை இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஆலோசனைபடி,  திருமங்கலம் பள்ளி மாணவிகள் சிறப்பாக செயல்பட்டு இந்த பணியை முடித்துள்ளனர். இந்த பணியை முடிப்பதற்கு சரியாக 3 மாதகாலம் ஆனதாக கூறப்படுகிறது.

மாணவிகளுக்கு அழைப்பு விடுத்த இஸ்ரோ:

3 மாதகாலம் சிறப்பாக செயல்பட்டு மாணவிகள் தயார் செய்த மென்பொருள், இஸ்ரோவுற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்ரீஹரிகோட்டா செயற்கைகோள் ஏவுதளத்திலிருந்து, வரும் 7ம் தேதி செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கோளுக்கு மாணவிகள் செய்த மென்பொருள் என்பது மிக முக்கியமானது. இந்த நிகழ்ச்சிக்கு திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் நேரில் பங்கேற்குமாறு இஸ்ரோவிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அன்பில் மகேஷ் பாராட்டு:

ராக்கெட் ஏவுதளத்திற்கு செல்லும் திருமங்கலம் மாணவிகள் குறித்து தகவல் அறிந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் -பொய்யாமொழி, திடீரென அந்த பள்ளிக்கு நேரில் சென்றார். பின்னர் சாதனை படைத்த  மாணவிகள் அனைவரையும் நேரில் அழைத்து சால்வை அணிவித்து ஒவ்வொரு மாணவிக்கும் திருக்குறள், ராஜராஜசோழன் வரலாறு உள்ளிட்ட புத்தகங்களை பரிசாக வழங்கினார். தொடர்ந்து, மாணவிகள் ஒவ்வொருவரிடமும் இந்த - சாதனை குறித்து கேட்டறிந்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

மாணவிகள் மகிழ்ச்சி:

இந்த நிகழ்வு குறித்து மாணவிகள் கூறும் போது, “முற்றிலும் மாணவிகளை மட்டும் கொண்டு தயாரிக்கப்பட்ட செய்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கான மென்பொருள் தயாரிப்பில் நாங்கள் ஈடுபட்டது வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம். இது ஒரு உலக சாதனையாகவே நாங்கள்  கருதுகிறோம். அதுமட்டுமல்லாமல் பள்ளி கல்வித்துறை அமைச்சர் நேரில் வந்து எங்களை பாராட்டியது பெருமகிழ்ச்சியளிக்கிறது" இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.