சர்வாதிகாரியாக செயல்பட்டு குற்றங்களை தடுப்பேன் - போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதல்வர் உறுதி!!

சர்வாதிகாரியாக செயல்பட்டு குற்றங்களை தடுப்பேன் - போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதல்வர் உறுதி!!

போதைப் பொருட்களுக்கு எதிரான செயல்பாடுகளில், சர்வாதிகாரியாக செயல்பட்டு குற்றங்களை தடுப்பேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். அது குறித்த விழிப்புணர்வு குறும்படத்தையும் அவர் வெளியிட்டார்.

பின்னர் பேசிய முதலமைச்சர், போதைப்பொருள் சங்கிலியை உடைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். போதைப் பொருள் தடுப்பு சட்டங்களை கடுமையாக்குவதுடன், அதற்காக சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறினார். மேலும், போதைப்பொருட்களுக்கு எதிரான செயல்பாடுகளில், தாம் சர்வாதிகாரியாக செயல்பட்டு குற்றங்களை தடுப்பேன் என்றும் உறுதிபடத் தெரிவித்தார். மாணவர்களை போதை பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வரும் பெரும் பங்கு ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உண்டு என்றும் முதலமைச்சர் கூறினார். இதனைத் தொடர்ந்து, போதைப் பொருள் தடுப்பு குறித்த உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதனிடையே, சென்னை வியாசர்பாடி அருகே, பாடை கட்டி சங்கு ஊதி ஊர்வலமாக சென்று, கல்லூரி மாணவர்கள் நடத்திய போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள், எம்.கே.பி. நகர் போலீசாருடன் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியின்போது, போதைப்பொருள் பயன்பாட்டால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது போல தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டு நடைபெற்ற ஊர்வலம் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.