நாடாளுமன்ற நியமன பதவி கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை - பி.டி.உஷா!

நாடாளுமன்ற நியமன பதவி கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை - பி.டி.உஷா!

இந்திய தடகள வீரரான பி.டி.உஷா நேற்று நாடாளுமன்ற நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதனையொட்டி சேலத்தில் இன்று ஏழு கிலோ மீட்டர் தூர மினி மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த பி.டி.உஷா நாடாளுமன்ற நியமன பதவி கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற நியமன உறுப்பினராக  பி.டி.உஷாவை அறிவித்த குடியரசு தலைவர்:

மாநிலங்களவையில் 12 நியமன உறுப்பினர்களை நேரடியாக நியமிப்பதற்கு குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. அதுமட்டுமல்லாமல் குடியரசுத் தலைவரால் நியமன உறுப்பினர்களாக  பரிந்துரைக்கப்படுபவர்கள் பொருளாதாரம், இலக்கியம், ஊடகம், கலை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்களாக இருக்க வேண்டும். தற்போது அதன்படி தான் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று, இந்திய தடகள வீராங்கனை பி.டி.உஷாவை நியமித்துள்ளார். அதேசமயம் இசைஞானி இளையராஜா, தெலுங்கு திரைக்கதை எழுத்தாளர் வி. விஜயேந்திர பிரசாத் மற்றும் ஏழைகளுக்கு உதவுபவரும்(philanthropist)  ஆன்மீக தலைவருமான வீரேந்திர ஹெக்கடே ஆகியோரை நியமன உறுப்பினர்களாக நியமித்தார்.  

சேலத்தில் மினி மாரத்தான் போட்டியை தேசிய தடகள வீராங்கனை  பி.டி. உஷா துவங்கி வைத்தார்:

சேலம் தனியார் பல்கலைக்கழகத்தின் சார்பாக  இன்று ஏழு கிலோ மீட்டர் தூர ”மினி மாரத்தான்” போட்டி, காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை தேசிய தடகள வீராங்கனையும், நாடாளுமன்ற நியமன உறுப்பினருமான பி.டி. உஷா துவக்கி வைத்தார். 

செய்தியாளர்களை சந்தித்த பி.டி.உஷா:

”மினி மாரத்தான்” போட்டியை துவக்கி வைத்த பி.டி. உஷா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  நாடாளுமன்ற நியமன பதவி கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி தனக்கு வழங்கி இருப்பது இந்திய விளையாட்டு துறைக்கு அளிக்கப்பட்ட கௌரவம். குறிப்பாக தடகள வீரர்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் என பெருமிதம் தெரிவித்தார். 
தொடர்ந்து பேசிய அவர், தற்போதுள்ள தடகள வீரர்களில் நீரஜ் சோப்ரா நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடி வருகிறார். இதேபோன்று தடை ஓட்டம் , 100 மீட்டர் ஓட்டங்களில் வீரர்கள் நல்ல எதிர்பார்ப்பை கொடுத்துள்ளனர். 

பாராளுமன்றத்தில் விளையாட்டு துறை குறித்த கோரிக்கைகளை முன்வைப்பேன் - பி.டி.உஷா:

நாங்கள் விளையாடிய காலத்தில் பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு என்பது விளையாட்டு துறைக்கு செய்யப்படவில்லை. ஆனால் தற்போது மத்திய அரசு விளையாட்டு துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்து வருவதாக குறிப்பிட்டார். இதனால் பாராளுமன்றத்தில் தனக்கு பேச வாய்ப்பளிக்கும் போது அவர்களிடம் விளையாட்டு துறை சார்ந்த கோரிக்கைகளை கண்டிப்பாக முன்வைப்பேன் என்றும் கூறியுள்ளார். 

மேலும் விளையாட்டு துறைக்கு இந்திய பிரதமர் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வீரர்களை ஊக்கமளித்து வருகிறார். அத்துடன் வீரர்களை அடிக்கடி சந்தித்து அவர்களின் விளையாட்டுத் திறன் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடி அவர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறார். மேலும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று நாடு திரும்பும்  வீரர்களை சந்தித்து பேசி அவர்களை கௌரவப்படுத்தி வருகிறார். இது விளையாட்டு வீரர்களுக்கு மிகுந்த ஊக்கமளிப்பது மட்டுமல்லாமல், இது போன்ற நடவடிக்கைகளால் அடுத்த ஒலிம்பிக்கில் நமது வீரர்களிடம் இருந்து நிறைய பதக்கங்களை எதிர்பார்க்கலாம் என்றார்.