குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்த கணவன் - மனைவி..! நடந்தது என்ன?

ஈரோட்டில் குடும்ப தகராறு காரணமாக விஷத்தை குடித்த மனைவி உயிரிழந்த நிலையில், கணவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்த கணவன் - மனைவி..! நடந்தது என்ன?

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள பங்களாபுதூர் கள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன்.  விவசாயம் செய்து வரும் இவருக்கும் , கொங்கர்பாளையம் பகுதியை சேர்ந்த சரண்யா என்பவருக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கார்த்திகா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. இருப்பினும் இருவருக்கும் இடையே தனிகுடித்தனம் செல்வது தொடர்பாக அடிக்கடி வாய்தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு மழை வந்ததால் துவைத்து உலர வைத்திருந்த துணியை எடுத்து வீட்டிற்குள் வைக்குமாறு ஈஸ்வரன் மனைவி சரண்யாவிடம் கூறி உள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஈஸ்வரன் வாழை காட்டிற்கு அடிப்பதற்காக வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து உள்ளார். அதை பார்த்த சரண்யாவும் அதே பூச்சி மருந்து பாட்டிலை பிடுங்கி குடித்து உள்ளார். பூச்சி மருந்தை குடித்து கணவன் மனைவி இருவரும் மயங்கி கிடப்பதை பார்த்த உறவினர் இருவரையும் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

இதில் வழியிலேயே சரண்யா உயிரிழந்தார். ஈஸ்வரன் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் சரண்யாவுக்கு திருமணமாகி மூன்று வருடங்களே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக காவல்துறை சார்பில் தெரிவித்தனர்.

குடும்பத்தகராறு காரணமாக கணவன் - மனைவி இருவரும் விசம் குடித்தது, மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.