எடப்பாடி பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை.. 10 ஆயரம் வாழை மரங்கள் சேதம் - உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!!
எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் சூறாவளிகாற்றுடன் பெய்த கனமழையினால் 10 ஆயரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி பகுதி முழுவதும் விவசாயம் நிறைந்த பகுதியாக உள்ளது. பூலாம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நெற்பயிர்,கரும்பு, தென்னை, செண்டுமல்லி, வாழைமரம்,உள்ளிட்ட பல்வேறு வகையான விவசாயங்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் பூலாம்பட்டி, வளையசெட்டியூர், பொண்ணாகவுண்டனூர், கூடக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்திருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்தது.
இதனிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளை வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வாழை விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.