காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

இதுதொடர்பாக வானிலை மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்கிழக்கு வங்க கடல் வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 11ஆம் தேதி காலை தமிழக கரையை நெருங்ககூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம்  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர், மதுரை, சிவகங்கை, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், விருதுநகர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக் கூடும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. 

நாளை டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் , புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், 

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11ஆம் தேதி அன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், 

டெல்டா மாவட்டங்கள் ,அரியலூர், பெரம்பலூர் திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம் , புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. 12ஆம் தேதி அன்று வட கடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.  13ஆம் தேதி அன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யுமென குறிப்பிடப்பட்டுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. தெற்கு ஆந்திர மற்றும் தமிழக கடற்கரை பகுதிகள், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், தெற்கு வங்க கடல் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரைக்கு திரும்பி வருமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.