நீட் தேர்வுக்கு தொடர்ந்து தயாராக வேண்டும்... மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்...

இந்த நிமிடம் வரை தமிழகத்தில் நீட் தேர்வு உள்ளது" எனவே மாணவர்கள் "நீட் தேர்வுக்கு தொடர்ந்து தயாராக வேண்டும்" என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

நீட் தேர்வுக்கு தொடர்ந்து தயாராக வேண்டும்... மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்...
சென்னை பெருங்குடியில் உள்ள நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் தொழு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான கொரோனா தடுப்பு ஊசி முகாமினை தொடங்கி வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் வழங் கப்பட்டது பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :
 
தமிழகத்தில் தொழு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 11,490 பேர் பயன்பெறும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று தொடங்கப்பட்டது. இதன் மூலம் இப்பகுதியில் வசிப்போருக்கு இன்று முதல் தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றார்.
 
தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுமா என்ற கேள்விக்கு தமிழகத்தில் இந்த நிமிடம் வரை நீட் தேர்வு உள்ளது என மீண்டும் ஒரு முறை கூறிய அமைச்சர் தமிழக அரசு சார்பில் சட்டப் போராட்டம் என்பது தொடரும் திமுக அரசு என்றும் நீட் தேர்வுக்கு எதிரானது. 
 
நீட் தேர்வினை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதே நேரத்தில் ஆகஸ்ட் மாதத்தில் நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தேர்வுக்கு இன்னும் குறுகிய காலம் மட்டுமே உள்ளதால் மாணவர்கள் தொடர்ந்து தேர்வுக்கு தயாராக வேண்டும். மேலும், நீட் தேர்வு தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு பத்து நாட்களில் அறிக்கை முடிவு வர உள்ளது. பின்னர் அது குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும் என்றார்.  
 
மத்திய அரசு ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு 42 லட்சம் தடுப்பூசி வருவதாக கூறியிருந்த நிலையில் அதில் மீதம் 18 லட்சம் தடுப்பூசிகள் இந்த மாத இறுதிக்குள் தமிழகம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  அடுத்த மாதத்திற்கான தடுப்பூசி எண்ணிக்கையை மத்திய அரசு 71 லட்சமாக உயர்த்தி தருவதாகவும் தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஒரு மாதத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகளை கொடுத்தாலும் அதனை செலுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை தயாராக உள்ளது என தெரிவித்தார்.