நீதிமன்றத்தில் ஆஜரானார் எச். ராஜா..!  

உயர் நீதிமன்றத்தை அவதூறான சொற்களால் விமர்சித்தது தொடர்பான வழக்கில் இன்று பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நீதிமன்றத்தில் ஆஜரானார் எச். ராஜா..!   

புதுக்கோட்டை மாவட்டம் மெய்ய புரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு மேடை அமைப்பது தொடர்பாக 2018 செப்டம்பர் 15ஆம் தேதியன்று காவல்துறையினருக்கும் எச். ராஜாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காவல்துறையினரைக் மிகக் கடுமையாகத் திட்டிய எச்.ராஜா, உயர் நீதிமன்றம் தனக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதைக் குறிப்பிடும் வகையில் அவதூறான சொற்களால் நீதிமன்றத்தைக் குறிப்பிட்டார்.

இதையடுத்து அவர் மீது, திருமயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018 அக்டோபர் 22 அன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த எச்.ராஜா, “நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கிறேன்” என்று கூறியிருந்தார். மேலும் காவல்துறையினர் கைது செய்யக்கூடாது எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கோரி எச்.ராஜா மனுத்தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, இந்த வழக்கின் விசாரணைக்காக கீழமை நீதிமன்றத்தில் ஜூலை 23 ஆம் தேதி எச்.ராஜா நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எச்.ராஜா நேரில் ஆஜராகி, தான் பேசியது தொடர்பாக விளக்கமளித்தார்.