யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு..!

ஊடகங்களை தொடர்ந்து இழிவுப்படுத்தும் பாஜக மாநிலத்தலைவர் திரு.அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்.

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு..!

நிதானம் இழந்த அண்ணாமலை 

சென்னையில் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் இன்று (04-01-2023) காலை செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை. புதியதலைமுறை செய்தியாளர் திரு.இரா.முருகேசன், சமீபத்திய கோயம்புத்தூர் ஈஷா மையத்தில் இருந்து காணாமல் போய் பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் ஒருவரின் மரணம் குறித்து எழுப்பிய  கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தன் நிதானத்தை இழந்த தமிழ்நாடு பாஜக தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள், கேள்வி கேட்டவரைப் பார்த்து நீங்கள் எந்த ஊடகம் என்று கேட்க ஆரம்பித்து செய்தியாளரின் கேள்விக்கு நோக்கம் கற்பிக்கும் வகையில்  பேசியிருக்கிறார் அண்ணாமலை.

ஆரோகியமற்ற செயல் 

ஊடகவியலாளர் கேள்வியை எதிர்கொள்ள முடியாவிட்டால் அமைதி காக்கலாம். மாறாக ஊடகவியலாளர்கள் எந்த ஊடகம் என்பதை கேட்பதுடன் அவர்களின் கேள்விக்கும் செய்தி சேகரிக்கும் பணி குறித்தும் அவதூறு செய்வது ஆரோக்கியமான செயல் அல்ல.

வன்மையான கண்டனம்

இந்த நிதானமற்ற போக்கு ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல. இந்த மோசமான அணுகுமுறையை மிரட்டல் போக்கை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது. அரசியலில் வளர்ந்து வரும் அண்ணாமலை ஊடகங்களின் உரிமையை, உணர்வுகளை உரசிப்பார்க்கும் போக்கை கைவிட்டு நயத்தகு நாகரீக உறவை ஊடகங்களுடன் பேண கற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | மலத்தை அள்ளி வீசியும் தன் சேவையை தொடர்ந்து செய்த இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரி பாய் பூலே!!

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு – குறள் 127

பாரதிதமிழன்
இணைச் செயலாளர் 
சென்னை பத்திரிகையாளர் மன்றம்
04-01-2023