ஆளுநர் ஆர்.என் ரவிக்கு தமிழ்நாடு வரலாறு தெரியவில்லை - பொன்முடி விமர்சனம்!

ஆளுநர் ஆர்.என் ரவிக்கு தமிழ்நாடு வரலாறு தெரியவில்லை - பொன்முடி விமர்சனம்!

தமிழ்நாட்டின் வரலாறு தெரியாமல் ஆளுநர் ஆர்.என். ரவி பேசி வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் கருத்து குறித்த கேள்வி:

விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியம் கஞ்சனூர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் அறிவியல் ஆய்வுக்கூடத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  திறந்து வைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம்,  ”தமிழகம் என்பதே சிறந்த வார்த்தை, தமிழ்நாடு என்கிற வார்த்தை பிரிவினைவாதத்தை தூண்டும்” என்கிற கருத்தினை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கருத்து:

அதற்கு பதிலளித்த பொன்முடி, தமிழ்நாடு என்பது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு கருத்து, அது ஒன்றும் புதிதாக தோன்றவில்லை எனவும், இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்படும் பொழுது நடந்த விவாதத்தில் ஒற்றையாட்சி முறை மற்றும் கூட்டாட்சி முறை ஆகிய இரண்டு கருத்துக்கள் முன்மொழியப்பட்டன.

இதையும் படிக்க: அதிமுக பொதுக்குழு வழக்கு : 3 வது நாள் விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டு சொன்னது என்ன?

யூனியன் ஆப் ஸ்டேட்ஸ் என்றால் என்ன?:

அப்போது, அம்பேத்கர் அவர்கள் பொதுவான முறையில் யூனியன் ஆப் ஸ்டேட்ஸ் என்று கொண்டு வந்தார். யூனியன் என்றால் ஒருங்கிணைந்த அல்லது ஒன்றியம் என்று பொருள், அதேபோல்  ஸ்டேட்ஸ் என்றால் மாநிலம் என்று பொருள், இதன் அடிப்படையில் தான் தமிழ்நாடு என்ற பெயர் உருவாக்கப்பட்டது எனவும், இந்திய அரசியலமைப்பின்படி செயல்படுகின்ற முதலமைச்சர் நமது தமிழக முதலமைச்சர், இதில் எந்த ஒரு வேறுபட்ட கருத்தும் இல்லை என்று தெரிவித்தார்.

வரலாறு தெரியாமல் பேசும் ஆளுநர்:

ஆனால், தமிழ்நாடு என்பது சட்டமன்றத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானம் என்பது கூட ஆளுநருக்கு தெரியாமல் இருப்பது வியப்பை ஏற்படுத்துவதாகவும், தமிழ்நாட்டின் வரலாறு சரியாக தெரியாமல் ஆளுநர் பேசி வருவதாகவும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.