சாதியை நிரூபிக்க போராடிய அரசு ஊழியர்...! எல்.ஐ.சி உயரதிகாரிக்கு  2 லட்சம் அபராதம்...!! 

சாதியை நிரூபிக்க போராடிய அரசு ஊழியர்...! எல்.ஐ.சி உயரதிகாரிக்கு  2 லட்சம் அபராதம்...!! 

சான்றிதழின் உண்மைத் தன்மை ஏற்கனவே உறுதி செய்யப்பட்டதை மறைத்து வழக்கு தொடர்ந்த எல்ஐசி நிறுவனத்திற்கு ரூ 2 லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அபராத தொகையை சென்னை புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மையத்திற்கு வழங்க வேண்டும். இந்த தொகையை வழக்கு தாக்கல் செய்வதற்காக Affidavit  தயார் செய்த அதிகாரியிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் 

சிவகாசியைச் சார்ந்த  கொண்டரெட்டி என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்  கார்த்திகேயன். இவர்  இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில்1984 ஆம் ஆண்டு எழுத்தராக பணியில் சேர்ந்தார். அவர் பணியில் சேரும் பொழுது 1982 ஆம் ஆண்டு திருநெல்வேலி வருவாய்த்துறை அதிகாரிகள் கொடுத்த சாதிச்சான்றிதழை சமர்ப்பித்து பணியில் சேர்ந்தார்.

பணியில் சேர்ந்த பின் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் அவருடைய சாதி சான்றிதழை சரிபார்க்க திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பி உள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், கார்த்திகேயனின் சாதிச்சான்றை சரி பார்த்து அது மெய்த் தன்மை உடையது என அறிக்கையை 20.4.1990ல் அளித்தார்.

இதற்கிடையில்  கார்த்திகேயனுக்கும், அவரது சகோதரருக்கும் பதவி உயர்வு கிடைக்கப்பெற்றது. எனவே மீண்டும் இவரது சாதி சான்றிதழை சரிபார்க்க ஆயுள் காப்பீட்டு நிறுவனம் முயற்சி மேற்கொண்டது. இதற்காக மாநில கூர்நோக்கு குழுவுக்கு கடிதம் அனுப்பி இருவரின் சாதிச் சான்றையும் சரிபார்க்க ஆயுள் காப்பீட்டு நிறுவனம் கேட்டுக் கொண்டது.

அதனடிப்படையில் விசாரணை கடிதத்தை பெற்ற இவருடைய  சகோதரர் ஏற்கனவே சரிபார்க்கப்பட்ட தனது  சாதி சண்டிதழை மீண்டும் சரி பார்ப்பது தவறு என 1997ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏற்கனவே 1990ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரால் சரிபார்க்கப்பட்ட ஜாதி சான்றிதழை  மீண்டும் விசாரணைக்கு ஆயுள் காப்பீட்டு நிறுவனம் அனுப்பியது தவறு, எனவே இந்த விசாரணை கடிதத்தை ரத்து செய்வதாகவும், ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அளித்த உத்திரவை உறுதிபடுத்தியும் உத்தரவிட்டார்.

பின்னர், கார்த்திகேயன் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர் அல்ல என ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு புகார் கடிதம் வந்ததாகக் கூறி அவரிடம் விளக்கம் கேட்டது. மேலும் கார்த்திகேயன் ஜாதி சான்றிதழை சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "ஏற்கனவே கார்த்திகேயனின் சாதிச் சான்றிதழ் இரண்டு முறை உறுதி செய்யப்பட்டுள்ளது. பணி வழங்கும் அதிகாரி சாதி சான்றை ஒரு முறை சரி பார்த்து விட்டால் மீண்டும் மீண்டும் சரிபார்ப்பு என்ற பெயரில் தொந்தரவு கொடுக்ககூடாது. கார்த்திகேயனின் சாதிச் சான்று ஏற்கனவே 1990 ஆம் ஆண்டு  சான்று சரிபார்க்கப்பட்டு விட்ட நிலையில் தற்போது மீண்டும் அவரது சாதிச் சான்றை சரி பார்க்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் வழக்கு தொடுத்த போது 1990 ஆம் ஆண்டு சரி பார்க்கப்பட்ட தகவலை தன்னுடைய Affidavitல் சொல்லாமல் உண்மையை மறைத்து உள்ளார்கள்.

ஒரு மதிப்புமிகு அரசு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் நீதிமன்றத்தில் இந்த உண்மையை மறைத்து வழக்கு தொடர்ந்ததற்காக 2 லட்ச ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும் என்றும், அந்த அபராத தொகையை சென்னை புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு வழங்க வேண்டும். இரண்டு லட்ச ரூபாய் தொகையை வழக்கு தாக்கல் செய்வதற்காக Affidavit  தயார் செய்த அதிகாரியிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம்"  என உத்தரவிட்டதோடு, கார்த்திகேயனுக்கு சேர வேண்டிய ஓய்வு கால பலன்கள் அனைத்தையும் 4 வாரத்திற்குள் வழங்க உத்தரவிட்டுள்ளனர்.

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியர் ஒருவரின் சாதி சான்றிதழை மறுத்து தொடர்ந்து உயர் அதிகாரிகள் தொல்லை கொடுத்துள்ளதும் ஒரு பழங்குடி சமூகத்தை சேர்ந்த அரசு ஊழியர் தனது சாதியை நிரூபிக்க நெடுங்காலம் போராடி வந்ததும் நீதிமன்ற வளாகத்தில் கூடி இருந்தோரின் கவனத்தை ஈர்த்தன.