9 மாதங்களில் 3வது முறையாக மாற்றம்...அதிருப்தியில் மக்கள், வியாபாரிகள்!

9 மாதங்களில் 3வது முறையாக மாற்றம்...அதிருப்தியில் மக்கள், வியாபாரிகள்!
Published on
Updated on
1 min read

ஆவின் நெய் விலை லிட்டருக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பது சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவின் நெய் விலை உயர்வு:

ஆவின் நெய் விற்பனை விலையை லிட்டருக்கு 50 ரூபாய் உயர்த்துவதாக ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, திமுக அரசு பதவியேற்றதில் இருந்து ஆவின் பொருட்களின் விலையானது அவ்வப்போது உயர்ந்து வருகிறது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். 

அமலுக்கு வந்த புதிய விலை:

இந்நிலையில் பொதுமக்களையும், சில்லறை வியாபாரிகளையும் மீண்டும் அதிருப்திக்குள்ளாக்கும் விதமாக, ஆவின் நெய் விலையை 50 ரூபாயாக உயர்த்தி ஒரு லிட்டர் நெய்யின் விலை 580 ரூபாயிலிருந்து 630 ரூபாயாக உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த விலையானது இன்று முதல் அமலுக்கு வருவதாக சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்ட நிலையில், புதிய விலை அமலுக்கு வந்துள்ளது. 

3வது முறையாக உயர்ந்த விலை:

அதன்படி, கடந்த 9 மாதங்களில் இது 3வது முறையாக ஆவின் நெய் விலை உயர்த்தப்படுள்ளது. முதலில் கடந்த மார்ச் மாதம் ஒரு லிட்டர் நெய் 515 ரூபாயிலிருந்து 535 ரூபாயாகவும் , ஜூலை மாதம் 535 லிருந்து 580 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. தற்போது 580 ரூபாயிலிருந்து 630 ரூபாயாக மீண்டும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதிருப்தியில் மக்கள்:

ஆவின் நிர்வாகத்தின் இந்த அதிரடி அறிவிப்பால் சில்லறை வியாபாரிகளும், பொதுமக்களும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இதனையடுத்து இந்த புதிய விலையால் தமிழக அரசின் மீதும், ஆவின் நிர்வாகத்தின் மீதும் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிருப்தியில் உள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com