"சீருடையில் வரும் மாணவர்களுக்கு இலவச பயணம்" போக்குவரத்து துறை!

"சீருடையில் வரும் மாணவர்களுக்கு இலவச பயணம்" போக்குவரத்து துறை!

பள்ளி சீருடைகள் அணிந்து வரும் மாணவர்களை அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

அனைத்து பள்ளிகள் மற்றும் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இலவச பயண அட்டை வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி மாணவர்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள் சீருடை அல்லது பள்ளி கல்லூரிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருந்தால் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மாணவ, மாணவியர்களுக்கு கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டைகளை வழங்கும் பணிக்கான கால அளவை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த கல்வி ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை நடத்தினர்களிடம் காண்பித்து பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் எனவும் போக்குவரத்துத்துறை மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

சீருடை அணிந்திருக்கும் அல்லது அடையாள அட்டைகளை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டால் நடத்துநர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!