பன்னிரண்டாம் வகுப்பில் மாநில அளவில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு கட்டணமில்லாமல் பயிற்சியளிக்கவுள்ளதாக கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி அறிவித்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் வளாகத்தில் ஐஏஎஸ் படிப்பிற்காக பயிற்சி அளிக்கும் கிங் மேக்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேர்வில் வெற்றி பெற்ற 151 தேர்வர்களுக்கு பாராட்டும் விதமாக டாக்டர் கலாம் வெற்றியாளர் விருது 2023 வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அகாடமியின் உறுப்பினர் சத்யஸ்ரீ பூமிநாதன், கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் துணையோடு கடந்த 10 ஆண்டுகளில் 651 பேர் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்று உயர் அதிகாரிகளாக உள்ளதாக தெரிவித்தார்.
இங்கு இலவசமாகவும் மற்றும் கட்டணத்தின் மூலமாகவும் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐ ஆர் எஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்தவகையில், இந்த வருடம் தமிழகத்தில் 12 ஆம் ஆண்டு வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஐஏஎஸ் ஆகும் வரை இலவசமாக பயிற்சி அளிக்கப்படும் என்றும், மற்ற மாணவர்களுக்கு கட்டணத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறினார்.