உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி... மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை...

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி விட்டதாக வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி... மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை...

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,  கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சேலம், டெல்டா மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில்  கன மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை  கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி  மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், சேலம், நீலகிரி தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில்  இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது

15-ம் தேதியன்று, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் கன மழைக்கும். 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

சென்னையில் அடுத்த  48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.  

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக கூறியுள்ள வானிலை மையம். இது அடுத்த 48 மணிநேரத்தில்மேற்கு வட மேற்காக நகர்ந்து ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா, மத்திய கிழக்கு, தென்கிழக்கு வங்க கடல் பகுதி, மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று  வீசக்கூடும் என்பதால், இன்று முதல் 17-ம் தேதி வரை இங்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.