விமான சேவைகள் ரத்து...! மாண்டஸ் புயல் எதிரொலி..!

விமான சேவைகள் ரத்து...! மாண்டஸ் புயல் எதிரொலி..!

வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தமிழகத்தை  நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இதனால் மோசமான வானிலை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 4  விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 10க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

மாண்டஸ் புயல் தமிழகத்தை நெருங்கிக் கொண்டு இருப்பதன் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று காலையில் இருந்து சாரல் மழை பெய்து வருகிறது. அதோடு  காற்றின் வேகம் வழக்கத்தை விட அதிகமாக சுழன்று அடித்துக் கொண்டு இருக்கிறது. இந்த மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து, இன்று பகல் 12 மணிக்கு தூத்துக்குடி செல்லும்  விமானம், பிற்பகல் 2:25 மணிக்கு சீரடி செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதை போல் தூத்துக்குடியில் இருந்து மாலை 3:35 மணிக்கு சென்னை வரும் விமானமும், சீரடியில் இருந்து மாலை 6:30 மணிக்கு சென்னை வரும் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று, சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி மற்றும் சீரடி விமான சேவைகள் என 4  விமான சேவைகள் ரத்தாகி உள்ளன. அதோடு சென்னையில் இருந்து மும்பை, மதுரை, தூத்துக்குடி, ஹுப்ளி, கண்ணூர், கோலாலம்பூர், சிங்கப்பூர், இலங்கை, டாக்கா ஆகிய இடங்களுக்கு புறப்பட்டு செல்லும் 11 விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.

ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில், மாண்டஸ் புயலை சமாளிக்கும் விதத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் உட்பட அனைத்து ஏற்பாடுகளையும்  செய்தது குறித்து, உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று, சென்னை விமான நிலையத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் விமான பயணிகள், விமானங்கள்  பாதுகாப்பதற்காக, அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதை அந்த அடிப்படையில் தற்போது இந்த விமானங்கள் ரத்து, விமானங்கள் தாமதம் ஆகியவைகள் இருக்கின்றன என்றும், விமானங்கள் ரத்து, தாமதம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து தற்போது, மேலும் 2 விமான சேவைகளும் ரத்து செய்யப்படுள்ளன. அந்த வகையில், சென்னையில் இருந்து இன்று இரவு 7.10 மணிக்கு மங்களூர் செல்லும் விமானம் மற்றும் மங்களூரில் இருந்து இரவு 11.05 க்கு சென்னை வரும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க : ”இயங்காமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளால் பல கோடி ரூபாய் இழப்பு...” - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர்