'Finished'.. உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க அமைக்கப்பட்ட சிறப்பு குழு இன்று காலை சென்னை வருகை!!
உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினர் பணியை முழுமையாக முடித்து கொண்டு இன்று காலை சென்னை வருகின்றனர்.
உக்ரைன்-ரஷ்யா போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, எம்எம் அப்துல்லா, கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் மார்ச் 5ம் தேதி முதல் டெல்லியில் முகாமிட்டு தமிழக மாணவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டு வந்தனர்.
அன்று காலை டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து தமிழக மாணவர்களை பாதுகாப்பாக மீட்பது தொடர்பாகவும், முடிந்த அளவிற்கு விரைவாக மீட்கவும் கோரிக்கை வைத்தனர்.
உக்ரைனில் கிட்டத்தட்ட ஆயிரத்து 925 தமிழக மாணவர்கள் சிக்கி இருந்தனர். அவர்களில் ஆயிரத்து 525 மாணவர்கள் மத்திய அரசின் ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர். டெல்லியிலிருந்து தமிழக மாணவர்கள் தமிழக அரசின் செலவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று மட்டும் 3 விமானங்களில் 61 தமிழக மாணவர்கள் அழைத்துவரப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் டெல்லியில் இருந்து தமிழக அரசின் செலவில் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இந்த நிலையில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-70 விமானத்தில் அழைத்து வரப்பட்ட தமிழக மாணவர்கள் 12 பேருடன் தமிழக அரசின் சிறப்பு குழு இன்று காலை டெல்லியில் இருந்து தமிழகம் புறப்படுகிறது. காலை 10 மணி அளவில் சென்னை விமான நிலையம் வரும் தமிழக அரசின் சிறப்பு குழு மற்றும் தமிழக மாணவர்களை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று வரவேற்க உள்ளனர்.