பணிச்சுமை காரணமாக பெண் காவலர் தற்கொலை முயற்சி...

நெல்லையில் பணிச்சுமை காரணமாக பெண் காவல் ஆய்வாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணிச்சுமை காரணமாக பெண் காவலர் தற்கொலை முயற்சி...

நெல்லை மாநகர காவல் துறையில், பாளையங்கோட்டை போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மகேஸ்வரி. இந்த நிலையில் மகேஸ்வரி நேற்று திடீரென அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

அவரை மீட்ட அருகில் இருந்தவர்கள், சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்  சிகிச்சை பெற்று வருகிறார் இதற்கிடையில் பணிச்சுமை காரணமாகவும் உயரதிகாரிகளின் டார்ச்சர் காரணமாகவும் மகேஸ்வரி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக பாளையங்கோட்டை போக்குவரத்து பிரிவில் ஆள் பற்றாக்குறை அதிகளவு இருப்பதால் போக்குவரத்து காவலர்களுக்கு மிகுந்த பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாநகர காவல் துறை உயர் அதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக பல்வேறு காவலர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பலர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாளையங்கோட்டை காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் அருணாசலம் தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக சமீபத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வரை சென்றது, இருப்பினும் அடுத்தடுத்து இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக நெல்லை மாநகரில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குறிப்பாக ஹைகிரவுன்ட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பழனி கடந்த மாதம் 27- ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். உயர்அதிகாரி திட்டியதன் காரணமாகவே பழனி தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகன் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.

இதற்கிடையில் தமிழ்நாடு அரசு உத்தரவின்படி காவலர்களுக்கு வார விடுமுறை நெல்லை மாநகரில் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் பெண் காவல் ஆய்வாளர் பணிச்சுமை காரணமாக தற்கொலை முயற்சி செய்த சம்பவம் நெல்லை மாநகர காவல் துறையினரிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் ஆய்வாளர் மகேஸ்வரி கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது தனது தந்தை உயிரிழந்த செய்தி கேட்டும் சுதந்திர தின அணிவகுப்பை தலைமையேற்று நடத்தி விட்டு அதன்பிறகே தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார். இவரது கணவரும் நெல்லை நுண்ணறிவுப் பிரிவில் உதவி காவல் ஆய்வாளராக உள்ளார்.

இதுபோன்று காவல்துறையில் நற்பெயர் எடுத்த அதிகாரிகள் மனம் தளர்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்யும் சம்பவம் சமூக ஆர்வலர் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.