மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் 12ஆம் வகுப்பு தேர்வு எழுத விலக்கு: முதலமைச்சர் உத்தரவு  

12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளை எழுத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலக்களித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் 12ஆம் வகுப்பு தேர்வு எழுத விலக்கு: முதலமைச்சர் உத்தரவு   

இது குறித்து தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில்  2021ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதில் இருந்து அனைத்து மாணவர்களுக்கும் விலக்களித்ததைப் போல ஆகஸ்ட் 2021 திங்களில் நடைபெற உள்ள 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளைத் தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் 2016ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டப் பிரிவு 17(i)-ன் அடிப்படையில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சிப் பெற்றதாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

 இவ்வாறு தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண்கள் வழங்குவது குறித்த நடைமுறையை வடிவமைத்து உரிய ஆணைகள் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்படும். மேலும், மேற்படி தேர்வுகளை எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள், தாங்கள் விரும்பும் பட்சத்தில் இத்தேர்வினை எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு எழுதும் மாணவர்கள், பின்னாளில் இந்த ஆணையின் அடிப்படையில் தேர்ச்சிப் பெற்றதாக தங்களை அறிவிக்குமாறு கோரலாகாது என்றும் ஆணையிடப்பட்டுள்ளது." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.