சிறைக்கைதிகளை விடுதலை செய்வதில் திமுக இரட்டை வேடம் போடுகிறது ....சீமான் குற்றச்சாட்டு...!!

பல வருடங்களுக்கு மேலாக சிறைகளில் வாடும் கைதிகளை விடுதலை செய்வதில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

சிறைக்கைதிகளை விடுதலை செய்வதில் திமுக இரட்டை வேடம் போடுகிறது ....சீமான் குற்றச்சாட்டு...!!

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 65-ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, சென்னை சின்ன போரூரில் உள்ள  நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ராஜீவ்கந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை பெற்று வரும் நளினியை விடுதலை செய்வது தொடர்பான விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆளுங்கட்சியாக இருக்கும்போது எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது நளினியை விடுதலை செய்ய வேண்டும் என இரட்டை நிலைப்பாட்டை கடைபிடித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

அதுபோல பல வருடங்களுக்கு மேலாக சிறைகளில் வாடும் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்யும் விவகாரத்திலும் திமுக இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டினார். மேலும் தமிழகத்தில் நடைபெற உள்ள நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட இருப்பதாகவும் அதற்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், தனக்கு வீடு தேடிக் கொண்டிருப்பதாகவும் எனக்கு ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருப்பதாக பட்டியலை வெளியிட்ட நபரை தான் தேடிக் கொண்டிருப்பதாகவும் பட்டியலை வெளியிட்ட அவர் அதற்கான ஆதாரங்களை ஏன் வெளியிடவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்