உதயநிதி அமைச்சராக வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் - அமைச்சர் அன்பில் மகேஷ்....!
உதய நிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் அமைச்சராக வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை சேப்பாக்கம் அண்ணா கலையரங்கத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசு குழு அமைத்து பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது என்றும் ஒன்றிய அரசும் தனது நிதியை வழங்க வேண்டியுள்ளது என கூறினார்
மேலும் கொரோனா தொற்றுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதால் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என கூறிய அவர், மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளிக்கு வருவதாகவும், மாணவர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், உதய நிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் அமைச்சராக வர வேண்டும் எனவும், இது எனது விருப்பம் மட்டுமல்ல. சேப்பாக்கம் தொகுதி மக்கள் உள்ளிட்ட பலரது விருப்பம், மக்களுக்காக உழைக்கும் உதயநிதியின் திறமை ஒரு தொகுதியுடன் மட்டும் சுருங்கி விடக்கூடாது என்றும் கூறினார்.