அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...
நியாய விலைக்கடைகளில் தரமான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றிக் கிடைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் நலனுக்காக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையால் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர், பொதுமக்களுக்கு நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க வேண்டும் எனவும் பொருட்களின் தரத்தினை உறுதி செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும் கடனுதவி கோரும் சுய உதவிக் குழுக்கள், சிறு வணிகர்களுக்கும் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாகத் தகுதியானவர்களுக்கு கடன் வழங்கிட வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதேபோல் மக்களுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயக் கடன் நகைக்கடன் வழங்குதல், மானிய விலையில் உரம் மற்றும் விவசாய இடுபொருட்கள் வழங்குதல் போன்றவற்றை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்தவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.