எடப்பாடி பழனிசாமி யாருக்கும் உண்மையாக இல்லை : மோடி அமித்ஷாக்கு மட்டுமே உண்மையாக இருப்பார் - உதயநிதி

எடப்பாடி பழனிசாமி யாருக்கும் உண்மையாக இல்லை  : மோடி அமித்ஷாக்கு மட்டுமே உண்மையாக இருப்பார் - உதயநிதி
Published on
Updated on
1 min read


சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே உள்ள குரும்பப்பட்டி பகுதியில்  திமுக கழக முன்னோடிகள் ஆயிரம் பேருக்கு திமுக சார்பில் பொற்கிழி வழங்கும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, சேலத்தில் எப்பொழுது வந்தாலும் வரவேற்பு பெரிதாகவும் எழுச்சியாகவும் இருக்கும். நீங்கள் கொடுக்கும் வரவேற்பும் எழுச்சியும் நம்பிக்கை அளிக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் எங்களை ஏமாற்றிவிட்டீர்கள். மீண்டும் இந்த தவறை செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

சென்ற சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதி மட்டும் தான் வெற்றி பெற்றார்கள். அப்போது அமைச்சர் நேரு சேலம் மாவட்டத்தையும் திமுகவின் கோட்டையாக மாற்றி காட்டுவேன் எனக் கூறினார். அவர் சொன்னபடி மாற்றி காட்டுவார் என நம்புகிறேன். சேலம் மாவட்டத்திற்கு சாதாரண உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், தற்பொழுது அமைச்சராக வந்ததும் மறக்க முடியாத தருணமாக உள்ளது.

சேலம் எடப்பாடிக்கு வந்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேசாமல் போய்விட்டால் அவர் கோபித்துக் கொள்வார். அவர் ஜெயலலிதாவிற்கும், சசிகலாவிற்கும் உண்மையாக இல்லை, கட்சி தொண்டர்கள், தமிழக மக்களுக்கும் உண்மையாக இல்லை. எடப்பாடி பழனிச்சாமி உண்மையாக இருப்பது மூன்றே பேருக்கு தான். மோடி, அமித்ஷா, ஆளுநர் ரவி ஆகியோருக்கு மட்டும் தான் அவர் உண்மையாக இருக்கிறார்.

தமிழக ஆளுநர் அவருக்கு பிடித்த வார்த்தைகளை வைத்துவிட்டு மற்ற வார்த்தைகளை விட்டு படித்தார்.இதனால் தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் ஆளுநர் இருக்கும்போது அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். ஆளுநருக்கு முன்பாகவே எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஓடிவிட்டார்கள். ஆளுநரை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள் என்று பயந்துவிட்டார்கள்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை மக்கள் தேடி தருவர்கள் என்று  நம்பிக்கை உள்ளது. பெரியார், அண்ணா இவர்களை நேரில் பார்த்தது கிடையாது. மூத்த முன்னோடிகள் அவருடன் பயணித்து இருப்பீர்கள். உங்கள் முகத்தில் அவர்களைப் பார்க்கிறேன்” என்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com