ED சம்மனுக்கு தடை கோரி மனு தாக்கல் செய்த தமிழ்நாடு அரசு...தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்!

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு தடை கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம், நாளை ஒத்திவைத்தது.

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, சோதனைகள் நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தது. அத்துடன் திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான விவரங்களுடன் ஆஜராகும்படி, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக விசாரணை நடத்துவது மாநில அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது எனவும், அமலாக்கத் துறையின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது எனவும், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அரசு சார்பில் வாதிடப்பட்டது. 

இதையும் படிக்க : திருவாரூரில் சோகம்: மின் தடையால் அரசு மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு!

மேலும் மணல் கொள்ளை பற்றி விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரமில்லை எனவும், மாநில அரசு விவகாரங்களில் தலையிடும் சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

தொடர்ந்து, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இந்த வழக்கு  விசாரணைக்கு உகந்ததல்ல. கனிம வள சட்டம் மட்டுமல்லாமல்,  இந்திய  ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அனைத்து குவாரிகளின் விவரங்களை எப்படி கேட்க முடியும் எனவும், சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ள வழக்குகளின் விவரங்களை மட்டும் கேட்கலாம் என்றனர்.

இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை அளவுக்கு அதிகமாக மணல் எடுத்ததன் மூலம், 4500 கோடி ரூபாய் பணம் பரிவர்த்தனை நடந்துள்ளாகவும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை  பாதுகாக்க அரசு முயற்சிக்கிறது எனவும் குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனு மீதான உத்தரவை நாளைக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.