தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே சட்ட விரோத புகையிலை நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு 3 டன்னுக்கு மேல் புகையிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவல்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள அம்மா சத்திரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மொத்தமாக பதுக்கப்பட்டு சிறு சிறு பாக்கெட்டுகளாக தயார் செய்து விற்பனை செய்யப்படுவதாக திருவிடைமருதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
பறிமுதல் செய்த போலீசார்:
தகவலின் பெயரில், திருவிடைமருதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் அம்மாசத்திரம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ஒரு குடோனில் சுமார் மூன்று டன் எடையுள்ள பல லட்சம் மதிப்பிலான புகையிலை சிறு சிறு பாக்கெட்டுகளாக தயார் செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து புகையிலை மற்றும் அதன் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்த போலீசார்:
மேலும், இச்செயலில் ஈடுபட்ட செல்வகுமார் என்பவரையும், வெங்கடேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர், இருப்பினும், இச்சம்பவம் திருவிடைமருதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.