மணல் கடத்திய தி.மு.க. நிர்வாகியின் பதவி பறிப்பு...

மணப்பாறையை அடுத்த முத்தம்பட்டியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வாகியின் பதவி பறிக்கப்பட்டது.

மணல் கடத்திய தி.மு.க. நிர்வாகியின் பதவி பறிப்பு...

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த முத்தபுடையான்பட்டி ரெயில்வே மேம்பாலம் அருகே 2 டிப்பர் லாரிகளில் ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் அள்ளிக் கொண்டிருப்பதாக திருச்சி மாவட்ட எஸ்.பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி திருவெறும்பூர் பி.எச்.இ.எல் இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் தலைமையில் ஆயுதப்படை போலீசார் உள்ளிட்ட தனிப்படையினர் 13 ம் தேதி அதிகாலை முத்தபுடையான்பட்டி பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அப்போது ஏற்கனவே குவித்து வைக்கப்பட்டிருந்த மணலை ஜேசிபி உதவியுடன் இரண்டு டிப்பர் லாரிகளில் சட்டவிரோதமாக ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் 3 வாகனங்களையும் பறிமுதல் செய்ததுடன் 3 வாகனங்களின் டிரைவர்களையும் கைது செய்து மணப்பாறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் நடத்திய விசாரணையில் தி.மு.க கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஆரோக்கியசாமி கட்டுப்பாட்டில் தான் மணல் கடத்தல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி பிடிக்கபட்ட வாகனங்களும், பிடிக்கப்பட்ட டிரைவர்களும் சில மணி நேரங்களில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது டி.ஜி.பி யின் கவனத்திற்கும் உடனடியாக சென்றதாக கூறப்படுகிறது. உடனே சம்மந்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விடுவிக்கப்பட்டவர்களையும் கைது செய்ய திருச்சி மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

உடனே விடுவிக்கப்பட்ட நபர்களை கைது செய்யவும், விடுவிக்கப்பட்ட வாகனங்களை பிடிக்க மணப்பாறை போலீசார் ஆரோக்கியசாமியின் வீட்டிற்கு சென்ற போது வாகனங்கள் வழங்கப்படவும் இல்லை, விடுவிக்கப்பட்டவர்களும் தலைமறைவாகினர். இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த போலீசார் சில மணி நேர போராட்டத்திற்கு பின்னர் 2 வாகனங்களை மட்டும் பறிமுதல் செய்தனர். ஆனால் வழக்கில் இருவர் மட்டுமே சேர்க்கப்பட்டதோடு இரு வாகனங்களின் எண்கள் குறிப்பிடப்பட்டு அதில் யார் பெயரில் உள்ளது என்று தெரியாத அளவில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் சம்பவம் செய்தித்தாள்களில் வெளியானதுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். இதனால் வழக்கின் வேகம் மேலும் துரிதமானது. விடுவிக்கப்பட்ட நபர்களையும், வாகனங்களை பறிமுதல் செய்யும் முனைப்பிலும் போலீசார் தீவிரம் காட்டினர். 

அதன்படி ஏற்கனவே இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு டிப்பர் வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதுமட்டுமின்றி ஜேசிபி மற்றும் டிப்பர் டிரைவர்களான கார்த்திகேயன் (25), பவுல் சேகர் (28), மனோகர் வயது 36 ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதே போல் பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் உரிமையாளர்கள் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.  இதுமட்டுமின்றி ஜேசிபி இயந்திரத்தில் பதிவு எண் இல்லாமல் இயக்கப்பட்டுக் கொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

இதுஒருபுறம் இருக்க இந்த சம்பவத்தின் முக்கிய நபராக சொல்லப்படும் ஆரோக்கிசாமியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கி தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதே போல் காவல்நிலையம் அழைத்து வந்தவர்களை முதலில் விடுவித்ததாக மணப்பாறை இன்ஸ்பெக்டர் அன்பழகனை பணியிடை நீக்கம் செய்து திருச்சி டி.ஜ.ஜி. ராதிகா உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மணப்பாறையில் நடந்த இந்த மணல் விவகாரம் பிரச்சனை விஸ்வரூம் எடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.