சமையல் எரிவாயு விலை உயர்வு எல்லையைத் தாண்டுகிறது: கமல்ஹாசன் கடும் கண்டனம்...
சமையல் எரிவாயு விலை உயர்வு எல்லையைத் தாண்டுகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இதுவரை ரூ.825-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதன் விலை ரூ.850-ஆக உயா்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்தன. சமையல் எரிவாயு விலை 2021-ஆம் ஆண்டில் மட்டும் ஐந்து தவணைகளில் ரூ.150 உயா்த்தப்பட்டுள்ளது.
ஒருபுறம் சமையல் எரிவாயு விலை தொடா்ந்து உயா்த்தப்பட்டு வரும் நிலையில் மறுபுறம் அதன் மீதான மானியமும் தொடா்ந்து குறைக்கப்பட்டு வருகிறது.இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த விலை உயர்வுக்கு அரசியல் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சமையல் எரிவாயு விலையுயர்வு எல்லையைத் தாண்டுகிறது. தனது சாதனையைத் தானே முறியடிக்கிறது. நேரடியாக மக்கள் வயிற்றில் அடிக்கிறோம் எனும் ஓர்மை மத்திய அரசுக்குத் துளியும் இல்லை. எப்போது இதற்கெல்லாம் விடிவு வரப்போகிறது? என பதிவிட்டுள்ளார்.