பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்...

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது.

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்...

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. நேற்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, இதனை தெரிவித்தார். மேலும், இந்த கலந்தாய்வில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வாகும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேர்க்கை ஆணைகளை வழங்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்காக, மொத்தம் ஒரு லட்சத்துக்கு 74 ஆயிரத்து 930 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 440 கல்லூரிகள் மட்டுமே பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்கின்றன. இதனால், ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் மட்டுமே கலந்தாய்வுக்கு கிடைத்துள்ளன.  

5 கட்டங்களாக கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் தொடங்க உள்ளது.முதற்கட்டமாக தொழிற்கல்வி பிரிவில் விண்ணப்பித்த 2 ஆயிரத்து 60 மாணவர்கள், விளையாட்டு பிரிவில் விண்ணப்பித்துள்ள ஆயிரத்து 190 மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் விண்ணப்பித்துள்ள ஆயிரத்து 124 மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் விண்ணப்பித்துள்ள 182 மாணவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.அரசு பள்ளி மாணவர்கள் 15 ஆயிரத்து 660 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி, அவர்களுள் 11 ஆயிரத்து 390 பேருக்கு பொறியியல் இடம் கிடைக்கும்.