"கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கப்படாது" துரைமுருகன் அறிவிப்பு!
"கீழ்பவானி பிரதான கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கப்படாது" என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
பவானிசாகர் அணையின் கீழ்பவானி வாய்க்கால் உள்ளிட்ட ஆறுகளிலிருந்து பாசனவசதி தரும் நீர்வழித்தடங்களை கான்கிரீட் தடங்களாக மாற்ற தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. இந்நிலையில் நீர்வழித் தடங்களை கான்கிரீட் தளங்களாக மாற்றுவதினால் ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட பாசன கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் என்றும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் எனவும் கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கீழ்பவானி வாய்க்காலில் காங்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், கீழ்பவானி பிரதான கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கப்படாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கீழ்பவானி பிரதான கால்வாய் விரிவாக்குதல், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்திற்காக நபார்டு வங்கியின் மூலம் 709 கோடி ரூபாய் கடன் பெற்று பணிகள் துவங்க உள்ள நிலையில் இத்திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தாக குறிப்பிட்டுள்ளார். மேலும் கால்வாயின் தரைப்பகுதியில் கான்கிரீட் தளம் அமைத்து விட்டால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதால் இந்த முடிவை கைவிடுவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!