சிலம்பத்தில் சாதனை படைத்த 10 வயது சிறுவன்!!!

அப்பநாயக்கன்பாளையைம் அரசு பள்ளியில் பயிலும்  10 வயது சிறுவன், தொடர்ந்து 13 மணி நேரம் இரு கைகளில் சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனையை பதிவு செயதார்.

சிலம்பத்தில் சாதனை படைத்த 10 வயது சிறுவன்!!!

கோவை துடியலூர் அப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த நவீன் குமார்,உமாதேவி தம்பதியரின் மகன்  பவன். பத்து வயதான இவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார்.

குங்பூ,கிக் பாக்சிங், மற்றும் தமிழக பாரம்பரிய கலையான சிலம்பம் உள்ளிட்ட கலைகளை சிறு வயது முதலே பயிற்சி பெற்று வரும் இவர்,  ஏற்கனவே குங்பூ,கிக் பாக்சிங் விளையாட்டில் ஏற்கனவே மாநில, மாவட்ட அளவில் பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது புதிய உலக சாதனையாக தொடர்ந்து 13 மணி நேரம்  இரண்டு கைகளில் சிலம்பம் சுற்றி இந்தியா உலக  சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். சிறுவனின் உலக சாதனை நிகழ்வு துடியலூர் பகுதியில் உள்ள  தனியார் அரங்கில் நடைபெற்றது.

இதில் சிறுவன் பவன் காலை ஐந்து மணி முதல் சிலம்பத்தை லாவகமாக தனது இரண்டு கைகளால் தொடர்ந்து 13 மணி நேரம் சுற்றியபடி சாதனையை நிறைவு செய்தார். இந்த உலக சாதனை இந்தியா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. சாதனை சிறுவனுக்கு இந்தியா புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு கோவை மாவட்ட தலைவர்  பிரகாஷ்ராஜ் கண்காணித்து பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.

சிறுவன் பவனின்  சாதனை நிகழ்வில், அவரது பயிற்சியாளர் ஆனந்த குமார்,மற்றும் மாணவ,மாணவிகள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சாதனை சிறுவன் பவனுக்கு  கைகளை தட்டி ஊக்கமளித்தனர்.