கடல் அலையில் சிக்கிய மாணவன்...உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டம்!

கடல் அலையில் சிக்கிய மாணவன்...உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டம்!

கடலில் சிக்கி உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

கிரிக்கெட் போட்டிக்காக சென்ற மாணவர்கள்:

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மகன் மோகன் அதே பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று நெரும்பூர் பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட மாணவர்களை, அப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர் ஞானசேகரன் என்பவர் அனுபுரத்தில் நடைபெற்ற கிரிக்கெட் விளையாட்டு போட்டிக்காக அழைத்து சென்றுள்ளார்.

குளிக்க சென்ற மாணவன் மோகன்:

தொடர்ந்து, போட்டி முடிந்தவுடன் மாணவர்களை கல்பாக்கம் பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு ஆசிரியர் ஞானசேகரன் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், மாணவர்கள் அனைவரும் வீட்டிற்கு செல்லாமல்  கல்பாக்கம் கடலில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

இதையும் படிக்க: https://malaimurasu.com/posts/sports/india-pakistan-t20-cricket-photos

அலை சிக்கிய மோகன்:

அங்கு மோகன் உள்பட மாணவர்கள் அனைவரும் கடலில் குளித்து கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக மோகன் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சாலை மறியல் போராட்டம்:

தொடர்ந்து, மகன் உயிரிழந்த செய்தியை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முன்பு குவிந்து, மாணவனின் உயிரிழப்புக்கு காரணமான ஆசிரியரை கைது செய்யக் கோரியும்,  உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கடும் போக்குவரத்து:

போராட்டம் காரணமாக செங்கல்பட்டு - திண்டிவனம் சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அங்கிருந்து சென்ற போராட்டக்காரர்கள், உடலை வாங்க மறுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.