கிறிஸ்துவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்...

இந்துமத கடவுள்களையும், தலைவர்களை விமர்சித்த வழக்கில் கைதான கிறிஸ்துவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கிறிஸ்துவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்...

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த 18-ம் தேதி இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து உரிமை மீட்பு போராட்டம் நடத்தினர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாதிரியார்,  திமுக வெற்றி பெற்றது சிறுபான்மையினர் போட்ட பிச்சை என்று சர்ச்சைகுரிய வகையில் பேசினார். மேலும், பாரத மாதா குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா மற்றும் பல தமிழக அமைச்சர்கள் குறித்தும் இழிவாக விமர்சித்தார்.

இதுகுறித்தான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதனால் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களும், எதிர்ப்புகளும் கிளம்பின. இதனையடுத்து  காவல்துறையில்  30 பேர் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது புகாரளித்தனர்.  இதனையடுத்து  பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட  7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், மதுரை கள்ளிக்குடியில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்து கன்னியாகுமரி அருமனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து  கன்னியாகுமரி குழித்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15  நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.