என்றும் மீனவர்கள் பக்கம் இருப்பார் முதல்வர்: கனிமொழி

மீனவர்களின் பிரச்சனையை அவர்கள் பக்கம் நின்று ஆராய்ந்து தீர்ப்பதற்கான வழிகளை முதல்வர் முக. ஸ்டாலின் எடுப்பார் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார்.

என்றும் மீனவர்கள் பக்கம் இருப்பார் முதல்வர்: கனிமொழி

மீனவர்களின் பிரச்சனையை அவர்கள் பக்கம் நின்று ஆராய்ந்து தீர்ப்பதற்கான வழிகளை முதல்வர் முக. ஸ்டாலின் எடுப்பார் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. முகாமை கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழகத்தில் கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.5000 நிவாரணம் வழங்கவேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் அதை கண்டுகொள்ளாத அதிமுக அரசு ரூ.1000 மட்டும் கரோனா நிவாரணமாக வழங்கியது. இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி தமிழகத்தின் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றதும் கடந்த ஆட்சியில் மறுக்கப்பட்ட நிவாரண தொகையை வழங்க உத்தரவிட்டார். அதன்படி கடந்த மாதம் முதற்கட்டமாக ரூ.2000 கரோனா நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக ரூ.2000 நியாய விலை கடைகள் மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

மேலும் மக்கள் நலனுக்காக 14 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்கும் பணியும் இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீனவர்களின் நலனுக்காக அரசு தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே மீனவர்கள் வைக்கின்ற கோரிக்கைகளை அவர்களின் பக்கம் நின்று ஆராய்ந்து அதற்கான தீர்வை எட்டும் வழிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுப்பார் என்றார்.