போலீசாருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

போலீசாருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 968 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியிடங்களுக்கு  தேர்வு செய்யப்பட்ட 62 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை  முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று  வழங்கினார்.

குற்ற நிகழ்வுகளில் புலன் விசாரணை செய்யவும், குற்றச் செயல்களுக்குத் தண்டனை பெற்றுத் தரும் துறையாக மட்டுமின்றி, குற்றங்கள் நடக்காத வகையில் சூழ்நிலைகளை உருவாக்கும் துறையாகவும் காவல்துறை செயல்பட  காவல் துறையைப் பலப்படுத்தும் வகையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு 968 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த 968 காவல் உதவி ஆய்வாளர்களில், தாலுகா காவல் நிலையங்களுக்கு 660 நபர்களும், ஆயுதப்படைக்கு 225 நபர்களும், தமிழ்நாடு சிறப்புக் காவல்படைக்கு 39 நபர்களும் தேர்வாகியுள்ளனர்.

இதில் 281 பெண் காவல் உதவி ஆய்வாளர்களும் அடங்குவர். இவர்கள் தமிழ்நாடு உயர் பயிற்சியகத்தில் ஓர் ஆண்டுகாலம் அடிப்படை பயற்சி பெறுவார்கள். மேலும், குற்ற நிகழ்வுகளில் குற்றவாளிகளைக் கண்டறிய சேகரிக்கப்படும் சான்றுப் பொருள்களை அறிவியல் ஆய்வு மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்து குற்றவாளிகளுக்கு  தண்டனை வழங்க உதவுவதே தடய அறிவியல் துறையின் இளநிலை அறிவியல் அலுவலர்களின் முக்கியப் பணியாகும். இப்பணிக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 62 இளநிலை அறிவியல் அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மாநகரங்கள் மற்றும் மாவட்ட ஆய்வுக் கூடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

இந்நிகழ்ச்சியின்போது, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ்.கே. பிரபாகர்,  காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்