விசாரணையின்போது போலீசார் எப்படி இருக்கணும்... சுற்றறிக்கை அனுப்பிய கமிஷனர் சங்கர் ஜிவால்...

விசாரணையின் போது மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்து அனைத்து கூடுதல் ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர்களுக்கு சென்னை காவல் ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

விசாரணையின்போது போலீசார் எப்படி இருக்கணும்... சுற்றறிக்கை அனுப்பிய கமிஷனர் சங்கர் ஜிவால்...
விசாரணையின் போதும், போலீஸ் காவலின் போதும்  காவல்துறையினர் விதிகளை மீறி நடப்பதாகவும், அதே போல் வழக்குகளின் போது பறிமுதல் செய்யப்பட்ட  சொத்து ஆவணங்களை முறையாக பராமரிப்பதில்லை என புகார்கள் தொடர்ந்து வருவதால் அனைத்து கூடுதல், இணை, துணை ஆணையர்கள் விசாரணை அதிகாரி மற்றும் மேற்பார்வை அதிகாரியிடம் இந்த சுற்றறிக்கையை தெரிவிக்குமாறு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
 
குறிப்பாக கைதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் பணம், தங்கம், சொத்துகள் உள்ளிட்ட தகவலை முறையாக விசாரணை அதிகாரி பதிவு செய்திருக்க வேண்டும் எனவும், சம்மந்தப்பட்ட நபரிடம் பறிமுதல் செய்யப்பட்டதற்கான ஒப்புதல் சீட்டை விசாரணை அதிகாரி பெற்றிருக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், கைதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை form 91-ஐ பூர்த்தி செய்து தாமதமில்லாமல் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் வழக்கு தொடர்பாக நீதிமன்றம் சொத்துக்களை விசாரணை அதிகாரியிடம் கொடுத்தால் அதனை ஆவணப்படுத்தி வழக்கு கோப்பில் பதிவு செய்ய வேண்டும் எனவும் சுற்றறிக்கையின் மூலம் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
 
அதுமட்டுமல்லாமல் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை நீதிமன்றம் உரிய நபரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டால் அது குறித்தான ஆதாரங்களை முறையாக சரிப்பார்த்து வழங்க வேண்டும் எனவும், வழக்கு விசாரணையின்போது சம்மந்தப்பட்ட விசாரணை அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டு வேறு விசாரணை அதிகாரி நியமிக்கபட்டால் அவர் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை நேரில் பார்வையிட்டு தங்கம் போன்றவைகளை எடை மதிப்பிட்டு பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
 
மேலும், விசாரணையின் போது எந்த விதமான தவறும் இனி ஏற்படாதபடி சொத்து ஆவணங்களை  மேற்பார்வையிட்டு மாதத்திற்கு ஒருமுறை விளக்கம் அளிக்கும்படி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் 2 காவலர்களை நியமித்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.