கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு: இந்து சமய அறநிலையத்துறை தூங்கிக்கொண்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!

கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கி கொண்டு இருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு: இந்து சமய அறநிலையத்துறை தூங்கிக்கொண்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள அருள்மிகு காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 18.72 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சீனிவாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி உத்தரவிட்டு இருந்தது.  ஆனால் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி சீனிவாசன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 14 இடங்களில்  ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவற்றை அகற்ற அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார். மேலும், தமிழகத்தில் தற்போது வரை 1100 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,  கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும், இதை தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கி கொண்டு இருப்பதாக கண்டனம் தெரிவித்தனர்.

ஆக்கிரமிப்புகளை அரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வெறும் சம்பளத்தை மட்டும் வாங்கி கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.


வரலாற்று சிறப்பு மிக்க பல்வேறு கோவில்கள்  முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதற்கும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் எனவும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு  தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.