3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்!!
தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், விருதுநகர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மதுரை, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை அதி கனமழைக்கு வாய்ப்பு
நாளை கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நாளை தென்காசி, விருதுநகர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழையும் நீடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
வருகிற 5ஆம் தேதி இந்த மாவட்டங்களில் கனமழையும் நீடிக்கும்
வருகிற 5ஆம் தேதி நீலகிரி, ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நிலவரம்
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.