8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. மேலும் பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன்கூடிய கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னையை பொறுத்தவரை இன்று காலை மற்றும் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.